இணைப்பில்

Wednesday, November 27, 2013

வெட்டி பிளாக்கர் நண்பர்கள் நடத்தும் வலைபதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி.

அனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நமது ப்ளாக்கர் நண்பர்களுக்கு என்று ஒரு குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்று சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸ்சில் நடைபெற்ற போது முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே வெட்டி பிளாக்கர் என்கின்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நம் பதிவுகளை பகிர ஒரு திரட்டியாகவும்நம் வலையுலக நண்பர்களுக்கு ஒரு நட்பு பாலமாகவும் திகழ்ந்து வருகின்றது…!

ஆனாலும் வலையில் எழுதுபவர்கள் குறைந்து வருகின்றார்கள்,அதிகமாக முகப்புத்தகத்தில் இருக்கின்றார்கள்சிலருக்கு இப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் முகநூலில் பெரிய இடுகைகளைக் கூட வெளியிடுகின்றார்கள் அவர்களின் கவனம் வலைப்பதிவின் பக்கம் திருப்புவதற்கு ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று நண்பர்களால் முடிவெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள்,திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்;வெல்லுங்கள்.
  
பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 5000

இரண்டாம் பரிசு ரூ 2500

மூன்றாம் பரிசு ரூ 1500

சிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு

விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)

2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.

3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்

4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. கதைக்களம் இலக்கியம்க்ரைம்சஸ்பென்ஸ்நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.

6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.


கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்
----------------------------------------------------------------------------------------------

உங்களுடைய கதைகளை உங்கள் பெயர்வலைத்தள முகவரிஉங்கள்தொடர்பு எண்  குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும். 
  • கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 
  • நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது
  • போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது.
  • கதைகள் http://vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்


நடுவர்கள்
முதல் சுற்று நடுவர்கள்

கே.ஆர்.பி.செந்தில்
செங்கோவி
உணவுஉலகம் சங்கரலிங்கம்
மயிலன்
சிவக்குமார்
செல்வின்
தமிழ்வாசி
சங்கவி(சங்கமேஸ்வரன்)
வீடு.சுரேஷ்குமார்
முத்தரசு
ஆருர் மூனா செந்தில்

இரண்டாம் சுற்று நடுவர்கள்

பிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)
ராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)
செல்வேந்திரன்(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)

மூன்றாம் சுற்று நடுவர்கள்

வாமுகோமு (எழுத்தாளர்)
வா.மணிகண்டன் (எழுத்தாளர்)
அதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)

ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com  என்ற முகவரிக்கு மடல் வரைக

Thursday, November 7, 2013

Writer அதாவது எழுத்தாளர்



மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார், நம் எழுத்தாளர். தமிழில் மட்டும் முப்பது புத்தகங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார். இந்த முப்பது புத்தகங்களையும், தன் முப்பது வயதிற்குள் எழுதிமுடித்திருக்கிறார். உலக மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழ் மொழியிலிருந்து உலகமொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்வது அவருக்குக் கைவந்த கலை.

அவரின் தோற்றத்தையோ, உடையின் நிறத்தையோ, போட்டிருக்கும் கண்ணாடியின் விலையையோ உங்களுக்கு நான் கூறப்போவதில்லை. அவ்வாறு கூறி, கதையின் பக்க அளவை நீட்டி முழக்குவதில் எனக்கு உடன்பாடும் இருந்ததில்லை.

கதையென்றால் அதன் போக்கில் எழுதவேண்டுமென்று எகிப்திய எழுத்தாளர் முஷ்கர் டி சொல்லுவார். முஷ்கர் அல்லது டி எழுதியவையனைத்தும் ஆகச்சிறந்த இலக்கிய முத்துக்கள். முஷ்கருடைய படைப்புகளில், தேவையின்றி ஒரு காற்புள்ளியோ, இல்லை அரைப்புள்ளியோ இடம்பெறாது. ஒரு சிற்பி, சிலையைச் செதுக்குவதுபோல் பார்த்துப் பார்த்து இலக்கியம் படைத்தவர்.

அவரின் மரணமும், மிகச் சுவாரஸ்யமான ஒன்று. சாவில் என்ன சுவாரஸ்யமென்று கேட்காதீர். அவருடைய எழுத்தைப்போலவே, அவரது மரணமும் இலக்கியத்தனமானதாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தன் அறுபதாவது வயதில், தன் மூன்றாம் மனைவியுடன் கட்டிலின்பம் பெறும்போது உயிர் போய்விட்டதாம். கேட்கும்போதே “உச்” கொட்டத் தோன்றுகிறதா? கொட்டிவிடுங்கள்.

ஐயடா... 

நான் எழுதிக் கொண்டிருக்கும் கதை முஷ்கர் டி யைப் பற்றியதல்ல. இக்கதை நம் தமிழ் எழுத்தாளர் பற்றியது. நாற்பது வயதைக் கொஞ்சம் நரையுடன் நெருங்கிக்கொண்டிருக்கிறார். முன்பொருகாலத்தில் மீசை வைத்திருந்தார். இப்போதெல்லாம், மீசையை மழித்துவிடுவார் போலும்.

இதோ, கதையின் கருவுக்கே திரும்பிவிடுவோம்.

ஆம், நம் எழுத்தாளர் மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

அவரின் திருமணத்துக்கு முன்புவரை, இலக்கியம், உரை, பத்தி என விரிந்த எழுத்துக்கள், இப்போதெல்லாம் மளிகைக் கணக்கு, வரவு செலவுக் கணக்குகள், குழந்தையின் வீட்டுப்பாடம் எனச் சுருங்கிப்போயிற்று என்று சொன்னால் அது மிகையாகாது.

அவரின் துணைவியார் அவ்வளவு பெரிய அரக்கி இல்லைதான். அரக்கியாய் இருந்திருந்தால், மேலே சொன்ன மளிகை, வீட்டுப்பாடம் போன்றவற்றை எழுதத்தான் சொல்வாளா? பேனாவைக் கையிலேடுத்தாலே மூச்’சென்று கத்தியிருப்பாள். முடிந்தால், பூரிக்கட்டையால் அடித்தே, எழுத்தாளரின் கையை முறித்திருப்பார். அதனால்தான் சொல்கிறேன்,
”அவரின் துணைவியார் அவ்வளவு பெரிய அரக்கி இல்லைதான்.” 

அவரது புத்தக வெளியீடுகள் எல்லாம், ஊரின் மீப்பெரும் உணவகங்களில் அல்லது கடலின் நடுவே அல்லது வானத்தில் பயணித்தபடியே அல்லது மலையின் உச்சியிலே அல்லது.....
இப்படி எங்கேனும் வித்தியாசமான இடங்களில் நடந்துகொண்டே இருக்கும்.
ஒருமுறை புளியமரத்தின் உச்சாணிக் கொம்பிலேறி வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான எழுத்தாளர்தான், மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆறு வருடங்களாக, அதாவது, திருமணத்துக்குப் பின், இலக்கியங்கள் படிப்பது சுத்தமாக நின்றேவிட்டது, அவர் எழுதுவதை நிறுத்தியதைப்போல். காரணம்தான் தெரியுமே. ஆம்....
அவரது சகதர்மினியேதான்.

இவர் அவளுக்குத் தெரியாமல் தினசரி கூட படிக்க முடியாத நிலை. அவருக்குப் பேனா வேண்டுமென்றால்கூட மனைவியிடம்தான் கேட்கவேண்டும்.

அவரது மனம், இப்போதெல்லாம் புழுப்போல நெளிந்துகொண்டிருக்கிறது. தெரிந்ததை எழுதமுடியாமல், தெரியாததைப் படிக்கமுடியாமல்.......
மக்களை அடிமைப்படுத்தும் முறைகளில் திருமணமும் ஒன்று. அதை எதிர்த்துப் புரட்சி செய்யவேண்டுமென புழுங்கிக்கொண்டிருக்கிறார். அடிமையின் ஓலமாக, அவரின் இயலாமை நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.

நடைபிணமாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

என்றேனும் ஒருநாள் அவர்தம் மனைவி அவரை வீட்டில் விடுத்துப் போகட்டும், அந்த நன்னாளிலாவது அவளின் கோலப் புத்தகத்தை, பிரஞ்ச்சில் மொழிபெயர்த்துவிட வேண்டுமென்று பொருமிக்கொண்டிருக்கிறார், நம் எழுத்தாளர்.

-வெளங்காதவன்.