இணைப்பில்

Thursday, October 9, 2014

ஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்

முதலில் இதை வாசித்துவிட்டுத் தொடரவும்.


அன்பின் பிச்சை,
உமது தளத்தில் வெண்முரசின் ஒரு பகுதியாம் 'நீலம்' பற்றிய உமது கேள்விகளையும் ஜெயனின் பதில்களையும் பார்த்தேன்.
 'எல்லாபடைப்புகளும் எல்லாருக்குமானவை அல்ல' என்ற அ.மி.யின் கருத்தை ஜெயன் எடுத்தாண்டது சரியெனவேபடுகிறது. நமது உரையாடல்களின் முனைகள் இந்தப் புள்ளியில்தான் சந்திக்கின்றன என நினைக்கிறேன். ஆனால், ஜெயனின் 'நல்ல வாசகர்களில், தொடர்ந்து வாசிப்பவர்களிலேயே அனைவரும் சமானமானவர்கள் அல்ல. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாசிப்புப்பயிற்சியும் மனநிலையும் ஒவ்வொன்று என்பதற்கு அப்பால் பொதுவான  ஒரு  பிரிவினை உள்ளது என நான் அவதானித்திருக்கிறேன்' என்பதிலுள்ள பொதுவான ஒரு பிரிவினைபற்றிக் கடித உரையாடலாகத் தொடரலாமென்றிருக்கிறேன்.
     பொதுவாகவே, அனைத்து இலக்கியங்களும் இலக்கைச் சுவைபட இயம்புவதைப்போலவே, ‘அறம்எனும் மையக்கூறினைச் சுற்றியே நகர்வதை உணர்ந்திருக்கலாம். எவ்வாறெனில், கள்வனெனில் ஒழுக்கம் எனும் அறத்திலிருந்து பிறழ்ந்தவன்; காவலனெனில் தனதொழுக்கத்தால் அமைதியெனும் அறத்தைக் காப்பவன். மட்டுமல்ல, கற்பு, நெறி, சீர்(ஒழுங்கு), ஏர், போர் இவையெல்லாமே அறத்தைப் பற்றியவையாகவே இருக்கின்றன, அவை அறத்திலிருந்து பிறழ்ந்திருந்தாலும்!

     அறமென்பது மீபெரும் உருவாக்கம். அன்பு, பாசம், பந்தம், சமூகம், கலாச்சாரம், பண்பாடு, உவகை, காதல், காமம், அமைதி இன்னும் இன்னும் பலவற்றால் பின்னப்பட்ட மூங்கில் பந்து. ஒவ்வொரு நேர்கோட்டு இணுங்கியாலும் கட்டப்பட்ட கோளப்பந்து. எந்தப்படைப்பிலும், எழுத்தாளனானவன் அக்கோளப்பந்தின் ஏதுமொரு இணுங்கியைக் கிள்ளி, அவனது பிரக்ஞையுடனோ அல்லது பிரக்ஞையின்றியோ அதனை மையப்படுத்தியோ, விலகியோ இயங்கி வாசகனின் அகவுணர்வைத் தூண்டி தனது படைப்பை நிலைநிறுத்துகிறான்.

     இந்த இணுங்கியைப் பற்றிய சுயநிலைப்பாடுதான் ஜெயன் சொன்ன அந்தப் பிரிவினை என்று நினைக்கிறேன். இன்னும் கூர்தீட்டிச் சொல்லவேண்டுமெனில், அன்பெனும் அறத்தில் பிச்சையாகிய உமக்கு உயிர்க்கொலை பாவம்என்ற நிலைப்பாடு; எனக்கோ மீன், கோழி மற்றும் ஆடுகள்வரை கொள்ளலாம். தவறொன்றுமில்லைஎனும் நிலைப்பாடு.

     இதுமாதிரியான நுண் உணர்வுகளின் நிலைப்பாட்டு வேற்றுமைகள்தான் ஜெயன் சொல்லும் பிரிவினை(களு)க்குக் காரணமென்றும் எண்ணுகிறேன். இந்தமாட்டில் ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு படைப்பு, பல்வேறு நிலைப்பாட்டை இயம்பும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதில் பரிதாபம் என்னவெனில் இந்தப் பிரிவினைகளை எற்றுக்கொண்டவாறே ஒரு படைப்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டால் போதும். அதுவே இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படும்; இதில் ஃபேக், ஒரிஜினல் என்ற பேச்சுக்கே இடமில்லை.  

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

மேலும் எழுதுவோம்.

Friday, January 17, 2014

கொசு பிடிப்பவன்

கொசு பிடிப்பதில் நான் வல்லவனாகிவிட்டேன். ஆம், நீங்கள் சரியாகத்தான் படிக்கிறீர்கள். அடிப்பதிலள்ள, பிடிப்பதில்தான். ஆல்கஹாலேரிய என் ரத்தத்தைக் குடித்த கொசுக்கள், காற்றில் மிதந்துவரும் அழகே அழகு. என் பிரியக் கொசுக்கள் வலிக்காமல் ரத்தம் உறிஞ்சுவதில் வல்லவை. என் அறையின் சிலந்தி வலைகளினூடே ஒரு தேர்ந்த விமானியைப் போல, தன் உடலைச் சுமந்து பறந்து செல்ல என் பிரியக் கொசுக்களால் மட்டுமே முடியும்.

கதவுச் சந்து, சன்னல் என்றெல்லாம் இல்லை. என் அறை முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கின்றன என் பிரியக் கொசுக்கள். என் அலமாரியின் ஒரு பகுதியை அவற்றிற்காகவே ஒதுக்கிவைத்திருக்கிறேன்.

அவை என்னுடன் பேசும் மொழியில், அந்தக் குழந்தைத்தனத்தில், அந்த வருடலில், அட அட அட... என்னே சுகம்.

ஏழு ஸ்வரங்களில், ரீங்காரம் என் பிரியக் கொசுக்களிடமிருந்தே பிறந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

இரவு நேரங்களில் அவை என்னுடன் பேச்சு வைத்துக்கொள்வதில்லை. நேரே வந்து என்னில் அமர்ந்து, வலிக்காமல் ரத்தமெடுத்துச் செல்லும். ரத்தம் குடித்த போதையுடன், அவை நன்றாக ஆடும். அதுவும் அந்த "அப்படிப்போடு.. போடு.." பாடலுக்கு அவை ஆடிய ஆட்டமிருக்கிறதே! கண்ணில் ஒத்திக்கொள்ளலாம்.

காலை நேரங்களில் என் பிரியக் கொசுக்களின் சங்கீதம் ஆரம்பமாகிவிடும். பாடுவதற்கு முன்பு சுதி சேர்ப்பதுபோல், தொண்டையைக் கனைப்பதுபோல் பற்பல முஷ்தீபுகளைப் பண்ணும். பின் "மானச சஞ்சரரே" என்று ஆரோகணிக்க ஆரம்பிக்கும். கண்களைக் கூர் கொண்டு பார்த்தால், அவற்றில் ஒரு கொசு 'கொன்னக்கோல்' பிடித்து ஜதி சொல்லிக்கொண்டிருக்கும்.

அட..அட...அட....

அந்தக் காட்சியை சொல்லால் விவரிக்க முடியாது.

"பரிபுரிதா முரளி" என்னும்போது அவற்றின் சாரீரம் உச்ச ஸ்தாயில் போகும். என்னே ஆலாபனை, என்னே விஸ்தரிப்பு!

என் பிரியக் கொசுக்களிடம், பிரியம் என்றுமே குறைந்ததில்லை; அவை முதலில் வலிப்பதுபோல் கடித்தபோதும்கூட.

 இப்பொழுதெல்லாம் என் கொசுக்களின் போதையாட்டம் வெறியாக மாறிவிட்டது போலும். திடீர் திடீரென அடித்துக்கொள்கின்றன. பாடலுக்கேற்ற லயம் தப்புகின்றன. குடிக்கும் ரத்தத்தில் இருக்கும் ஆல்கஹாலின் அளவு மிகுந்திருக்குமென்று எண்ணிக்கொண்டேன்.

என் பிரியக் கொசுக்கள் இப்போது துவண்டு துவண்டு விழுகின்றன. அதைப் பிடித்துப் பிடித்து நானும் வல்லவனாகிப்போனேன். என் பிரியக் கொசுக்களைப் பிடிக்க நான் இருக்கிறேன்.

என்னைப் பற்றிப்பிடிக்க எவர் வருகிறீர்?

Wednesday, November 27, 2013

வெட்டி பிளாக்கர் நண்பர்கள் நடத்தும் வலைபதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி.

அனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நமது ப்ளாக்கர் நண்பர்களுக்கு என்று ஒரு குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்று சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸ்சில் நடைபெற்ற போது முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே வெட்டி பிளாக்கர் என்கின்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நம் பதிவுகளை பகிர ஒரு திரட்டியாகவும்நம் வலையுலக நண்பர்களுக்கு ஒரு நட்பு பாலமாகவும் திகழ்ந்து வருகின்றது…!

ஆனாலும் வலையில் எழுதுபவர்கள் குறைந்து வருகின்றார்கள்,அதிகமாக முகப்புத்தகத்தில் இருக்கின்றார்கள்சிலருக்கு இப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் முகநூலில் பெரிய இடுகைகளைக் கூட வெளியிடுகின்றார்கள் அவர்களின் கவனம் வலைப்பதிவின் பக்கம் திருப்புவதற்கு ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று நண்பர்களால் முடிவெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள்,திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்;வெல்லுங்கள்.
  
பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 5000

இரண்டாம் பரிசு ரூ 2500

மூன்றாம் பரிசு ரூ 1500

சிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு

விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)

2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.

3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்

4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. கதைக்களம் இலக்கியம்க்ரைம்சஸ்பென்ஸ்நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.

6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.


கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்
----------------------------------------------------------------------------------------------

உங்களுடைய கதைகளை உங்கள் பெயர்வலைத்தள முகவரிஉங்கள்தொடர்பு எண்  குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும். 
  • கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 
  • நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது
  • போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது.
  • கதைகள் http://vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்


நடுவர்கள்
முதல் சுற்று நடுவர்கள்

கே.ஆர்.பி.செந்தில்
செங்கோவி
உணவுஉலகம் சங்கரலிங்கம்
மயிலன்
சிவக்குமார்
செல்வின்
தமிழ்வாசி
சங்கவி(சங்கமேஸ்வரன்)
வீடு.சுரேஷ்குமார்
முத்தரசு
ஆருர் மூனா செந்தில்

இரண்டாம் சுற்று நடுவர்கள்

பிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)
ராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)
செல்வேந்திரன்(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)

மூன்றாம் சுற்று நடுவர்கள்

வாமுகோமு (எழுத்தாளர்)
வா.மணிகண்டன் (எழுத்தாளர்)
அதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)

ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com  என்ற முகவரிக்கு மடல் வரைக

Thursday, November 7, 2013

Writer அதாவது எழுத்தாளர்



மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார், நம் எழுத்தாளர். தமிழில் மட்டும் முப்பது புத்தகங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார். இந்த முப்பது புத்தகங்களையும், தன் முப்பது வயதிற்குள் எழுதிமுடித்திருக்கிறார். உலக மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழ் மொழியிலிருந்து உலகமொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்வது அவருக்குக் கைவந்த கலை.

அவரின் தோற்றத்தையோ, உடையின் நிறத்தையோ, போட்டிருக்கும் கண்ணாடியின் விலையையோ உங்களுக்கு நான் கூறப்போவதில்லை. அவ்வாறு கூறி, கதையின் பக்க அளவை நீட்டி முழக்குவதில் எனக்கு உடன்பாடும் இருந்ததில்லை.

கதையென்றால் அதன் போக்கில் எழுதவேண்டுமென்று எகிப்திய எழுத்தாளர் முஷ்கர் டி சொல்லுவார். முஷ்கர் அல்லது டி எழுதியவையனைத்தும் ஆகச்சிறந்த இலக்கிய முத்துக்கள். முஷ்கருடைய படைப்புகளில், தேவையின்றி ஒரு காற்புள்ளியோ, இல்லை அரைப்புள்ளியோ இடம்பெறாது. ஒரு சிற்பி, சிலையைச் செதுக்குவதுபோல் பார்த்துப் பார்த்து இலக்கியம் படைத்தவர்.

அவரின் மரணமும், மிகச் சுவாரஸ்யமான ஒன்று. சாவில் என்ன சுவாரஸ்யமென்று கேட்காதீர். அவருடைய எழுத்தைப்போலவே, அவரது மரணமும் இலக்கியத்தனமானதாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தன் அறுபதாவது வயதில், தன் மூன்றாம் மனைவியுடன் கட்டிலின்பம் பெறும்போது உயிர் போய்விட்டதாம். கேட்கும்போதே “உச்” கொட்டத் தோன்றுகிறதா? கொட்டிவிடுங்கள்.

ஐயடா... 

நான் எழுதிக் கொண்டிருக்கும் கதை முஷ்கர் டி யைப் பற்றியதல்ல. இக்கதை நம் தமிழ் எழுத்தாளர் பற்றியது. நாற்பது வயதைக் கொஞ்சம் நரையுடன் நெருங்கிக்கொண்டிருக்கிறார். முன்பொருகாலத்தில் மீசை வைத்திருந்தார். இப்போதெல்லாம், மீசையை மழித்துவிடுவார் போலும்.

இதோ, கதையின் கருவுக்கே திரும்பிவிடுவோம்.

ஆம், நம் எழுத்தாளர் மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

அவரின் திருமணத்துக்கு முன்புவரை, இலக்கியம், உரை, பத்தி என விரிந்த எழுத்துக்கள், இப்போதெல்லாம் மளிகைக் கணக்கு, வரவு செலவுக் கணக்குகள், குழந்தையின் வீட்டுப்பாடம் எனச் சுருங்கிப்போயிற்று என்று சொன்னால் அது மிகையாகாது.

அவரின் துணைவியார் அவ்வளவு பெரிய அரக்கி இல்லைதான். அரக்கியாய் இருந்திருந்தால், மேலே சொன்ன மளிகை, வீட்டுப்பாடம் போன்றவற்றை எழுதத்தான் சொல்வாளா? பேனாவைக் கையிலேடுத்தாலே மூச்’சென்று கத்தியிருப்பாள். முடிந்தால், பூரிக்கட்டையால் அடித்தே, எழுத்தாளரின் கையை முறித்திருப்பார். அதனால்தான் சொல்கிறேன்,
”அவரின் துணைவியார் அவ்வளவு பெரிய அரக்கி இல்லைதான்.” 

அவரது புத்தக வெளியீடுகள் எல்லாம், ஊரின் மீப்பெரும் உணவகங்களில் அல்லது கடலின் நடுவே அல்லது வானத்தில் பயணித்தபடியே அல்லது மலையின் உச்சியிலே அல்லது.....
இப்படி எங்கேனும் வித்தியாசமான இடங்களில் நடந்துகொண்டே இருக்கும்.
ஒருமுறை புளியமரத்தின் உச்சாணிக் கொம்பிலேறி வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான எழுத்தாளர்தான், மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆறு வருடங்களாக, அதாவது, திருமணத்துக்குப் பின், இலக்கியங்கள் படிப்பது சுத்தமாக நின்றேவிட்டது, அவர் எழுதுவதை நிறுத்தியதைப்போல். காரணம்தான் தெரியுமே. ஆம்....
அவரது சகதர்மினியேதான்.

இவர் அவளுக்குத் தெரியாமல் தினசரி கூட படிக்க முடியாத நிலை. அவருக்குப் பேனா வேண்டுமென்றால்கூட மனைவியிடம்தான் கேட்கவேண்டும்.

அவரது மனம், இப்போதெல்லாம் புழுப்போல நெளிந்துகொண்டிருக்கிறது. தெரிந்ததை எழுதமுடியாமல், தெரியாததைப் படிக்கமுடியாமல்.......
மக்களை அடிமைப்படுத்தும் முறைகளில் திருமணமும் ஒன்று. அதை எதிர்த்துப் புரட்சி செய்யவேண்டுமென புழுங்கிக்கொண்டிருக்கிறார். அடிமையின் ஓலமாக, அவரின் இயலாமை நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.

நடைபிணமாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

என்றேனும் ஒருநாள் அவர்தம் மனைவி அவரை வீட்டில் விடுத்துப் போகட்டும், அந்த நன்னாளிலாவது அவளின் கோலப் புத்தகத்தை, பிரஞ்ச்சில் மொழிபெயர்த்துவிட வேண்டுமென்று பொருமிக்கொண்டிருக்கிறார், நம் எழுத்தாளர்.

-வெளங்காதவன்.

Wednesday, October 2, 2013

கொலை


இறக்கை இதழில் வந்த கதை.


சாயமேறிய அந்த நரையெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லைதான். ஆனாலும், நான் அவனைக் கொன்று கொண்டிருந்தது பிரச்சனையாக இருந்திருக்காது. பிரச்சனைகள் தீர்க்க இயலாமல்தான் என்னை நம்பி, கைக்கொண்டான். 
நான் அவனை தேர்ந்த கலைஞனைப்போல் கொன்று கொண்டிருந்தேன். அவன் தொண்டைதான் முதற்குறி. தொண்டை கமறக் கமறக் கொல்வது தனிச்சுகம். தொண்டை தாக்கிக் கொல்லவியலாமல் கொஞ்சம் நுரையீரல், கொஞ்சம் குடலெனப் பிரித்துக் கொண்டு கொல்லத் துவங்கினேன்.
இதோ, குடலிலிருந்த அமிலமெல்லாம் என்னைச் சூழ்ந்து கொண்டது. அமிலங்களின் வெம்மையால் அவன் வெகுநாட்களாக உண்டிருக்கமாட்டான் என உணரும்போதே, குடல் அமிலங்கள் மிக அடர்த்தியாக என்னைச் சூழ்ந்துகொண்டது.
அன்றொரு நாள் நான் கொன்றவன் பிரியாணி உண்டிருந்தது தூர மேகத்தின் நிழலாய் வந்துபோனது.
ஆம்...
நான் கொலைகாரன்தான். ஊரிலுள்ள எவரையும் கேளுங்கள். என்னைக் கொலைகாரனென்றே சொல்வார்கள். என்னைப் பிடித்து சிறையில் தள்ள எவனுக்கும் தைரியமில்லை. கொலைகளை ரசித்துச் செய்பவன். அந்தக் கொலைகளில்தான் என் ஆனந்தமிருக்கிறது. 
மீந்த நேரங்களில், அமைதியான நீரைப்போல் ஒரேயிடத்தில் அடைந்து கொண்டு. ஆனாலும், கொலை செய்வதென்றால் எட்டடிப்பாய்ச்சல்.
நான் கொல்ல முயற்சி செய்து, பிழைத்தவர்களில் இவனொருவனல்ல. 

ஆம், என் பணியை நான் மிகச் சிரத்தையாக, சிரமின்றியே நிறைவேற்றிவிடுவேன்.
ஒருவழியாய் என்னைக் கண்டு ஒழிந்துகொண்ட இவன் உயிரையும் குடித்துவிட்டேன். 
இதோ, நானும் மரிக்கப் போகிறேன். 
ஆம். என்னால் இறந்தவனின் இறுதிநாளே, எனது இறுதி நாளுமாம்.
கொன்றவனின் கை, கால், இதயமெங்கும் தாக்கி சக்கரவியூகத்தை உடைக்கத்தெரியாத அபிமன்யுவைப் போல, இந்த உடலிலேயே இறந்துவிடப்போகிறேன், விஷமாகிய நான்!

-வெளங்காதவன்